காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
3/3/2025 2:48:17 PM
ஸ்ரீ நகர், -ஜம்மு -காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தாட்சரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது.
இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகைதீன் என்ற லோக்கல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஆஷிக் உசைன் பட் என்பவன் உதம்பூரில் எல்லை பாதுகாப்பு படை மீது கடந்த ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவன் என்பதும் அவனை போலீசார் தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து 3 ஏ.கே. 47 ரைபிள்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.