போடியில் ஜெ. போட்டி? புரோக்கர்கள் படு பிஸி
3/3/2025 2:39:03 PM
தேனி, -தேனி மாவட்டம், போடியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகவே கூறப்படுகிறது. இதன் அறிகுறியாக போடி மற்றும் தேனி மாவட்டத்தில் புரோக்கர்கள் அதிமுக கட்சியினருக்கு தற்காலிகமாக வீடு தேடும் பணியில் மும்முரமாக உள்ளனர்.ஜெயலலிதா போட்டியிட்டால் எல்லா கிராமங்களுக்கும் சென்று அவரால் ஓட்டு வேட்டையாட முடியாது. தற்போதைய நிலையில் 60 சதவீதத்துக்கும் மேலான அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே, இவர்களை தான் நிற்கும் தொகுதியில் தேர்தல் பணியாற்ற ஜெயலலிதா அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர்களும் மாவட்டத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். முக்கிய பேச்சாளர்கள், நடிகர், நடிகைகளும் இங்கு பிரசாரம் செய்ய உள்ளனர்.எனவே, இவர்கள் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய வாடகை வீடுகளுக்கு அட்வான்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வீடுகளை பிடித்துக்கொள்வது பாதுகாப்பு என்ற எண்ணத்தில் அதிமுகவினர் புரோக்கர்களை அணுகி உள்ளனர். மாவட்டத்தில் முக்கியநகரங்களில் உள்ள வீடுகளை வாடகைக்கு பிடித்து தரும் பணியில் புரோக்கர்களும் படு பிசியாக களமிறங்கி விட்டனராம்.கடைசி நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்பதால் முடிந்தவரை இப்போதே அட்வான்ஸ் கொடுத்து வீடுகளை ஆக்கிரமித்து கொள்கின்றனராம் அதிமுகவினர்.