சென்னை மாநகராட்சி, அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு- நன்றாக தேர்வு எழுத முடியுமா? என பெற்றோர் கவலை
3/3/2025 2:34:59 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதில்லை என்று ஏற்கெனவே பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வித்தரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரு ஆசிரியரே இரண்டு, மூன்று பாடங்களை நடத்தி வருகிறார். அதேபோல், இரண்டு வகுப்பு மாணவர்களையும் மரத்தடியில் ஒன்றாக அமரவைத்து ஆசிரியர் பாடம் நடத்தும் அவலநிலையும் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் அந்த மாணவர்கள் பாடங்களை படித்து புரிந்து கொள்வதில் சிரமம் இருந்து வருகிறது. 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் அடிக்கடி சந்தேகங்கள் வரும். அதைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற நேரிடுகிறது.
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே படித்து வருகின்றனர். அம்மாணவர்களின் கல்விக்காக, அவர்களின் பெற்றோர் எந்தத் தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றனர்.ஆனால், அந்த மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தாலும், அவர்களை பள்ளிக்கூடத்தை தூய்மைப்படுத்துதல், கழிவறைகளை சுத்தப்படுத்துதல், வெளியிடங்களில் இருந்து பொருட்களை மூட்டை கட்டி தூக்கி வரச்செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அப்பள்ளி நிர்வாகம் அளித்து வஞ்சித்து வருகிறது.அவர்களும் தங்கள் ஆசிரியர்கள் சொல்கிறார்களே என்ற அக்கறையுடன் செய்து வருகின்றனர். அவர்கள் சாலையில் பொருட்களை மூட்டை கட்டி தலையில் சுமந்து செல்வதை, அம்மாணவர்களின் பெற்றோர் பார்க்கும்போது ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.
உதாரணமாக, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் அருகே கடந்த வாரம் ஒருவர் மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் லேப்டாப்புடன் பைகளை வைத்திருந்தார். அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு அரசு பள்ளி மாணவன் முகத்தை மறைக்கும் அளவுக்கு, இரு கைகளிலும் அணைப்பு கொடுத்தபடி, அவனை சுற்றிலும் லேப்டாப் பைகளை வைத்திருந்தான்.அந்த வாகனம் தேனாம்பேட்டை சிக்னலில் நின்றபோது, தனது மகனை பார்த்து அவனது தாய் கண்ணீர் விட்டு கதறிவிட்டார். ஆனால், மோட்டார் சைக்கிளில் வந்தவரோ, எந்த சமாதான பதிலையும் கூறாமல் சென்றுவிட்டார்.
இதேபோல்தான் ஒவ்வொரு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாட நேரத்தில் அளிக்கும் அனைத்து பணிகளையும் அப்பள்ளி மாணவர்கள் செய்து வருகின்றனர். அம்மாணவர்களின் படிப்பு குறித்து ஆசிரியர்களோ, அப்பள்ளி நிர்வாகமோ கவலைப்படுவதில்லை.
இதுகுறித்து ஒருசில பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, ‘நாங்க படிப்பதற்குத்தான் ஆவலாக ஸ்கூலுக்கு வருகிறோம். ஒரு பீரியட் முடிந்ததும் மற்றொரு ஆசிரியர் வரமாட்டார். இருக்கும் ஆசிரியரோ, ஒரு டீ வாங்கி வா என்று அனுப்புவார். அவருக்கு டீ வாங்க வெளியே வந்தால், பள்ளி அலுவலகத்தினரும் கூடுதல் வேலையை செய்ய சொல்கின்றனர்.அவர்கள் வேலையை செய்துவிட்டு, டீ வாங்கிவர லேட்டாகிவிட்டால், ஆசிரியர் திட்டி, வெளியே நிற்க வைத்துவிடுகிறார். இதனால் நாங்கள் பள்ளிக்கு வரவே பயமா இருக்கு. எங்களுக்கு புரியற மாதிரி பாடம் சொல்லி கொடுத்தா, எங்களால நிறைய மார்க் எடுக்க முடியும். டீச்சருக்கே புரியவில்லை. நாங்க என்ன செய்ய?’ என்று பரிதாபமாக கூறுகின்றனர்.
ஆனால், ‘கல்வித்துறை வளர்ச்சிக்காக இத்தனை கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம், பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2வில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறோம்’ என்று சென்னை நகர மேயரும் அரசு கல்வித்துறை உயர் அதிகாரிகளும் பெயரளவுக்கு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அப்பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்கு உள்ள ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதிலும், அவர்களுக்கு தேவையான செய்முறை பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் போல் நடத்தி, அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு எந்த முயற்சியையும் எடுப்பதில்லை என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால்தான் பெரும்பாலான ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க கடன்படுவதுடன், மறுநாள் நுழைவு விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே நீண்ட கியூவில் பல மணி நேரம் காத்திருக்கத் துவங்கிவிட்டனர்.அந்தத் தனியார் பள்ளிகளும் பெயரளவுக்கு நுழைவு தேர்வு வைத்துவிட்டு, பெற்றோர்களிடம் இருந்து பெருந்தொகையை டொனேஷனாகப் பெற்று வருகின்றனர். பெற்றோரும் கடன் வாங்கி, பள்ளி கூறும் அனைத்து கன்டிஷன்களுக்கும் உடன்பட்டு பிள்ளைகளை சேர்த்துவிட்டு, பின்னர் பள்ளி படிப்பு முடியும்வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பள்ளி கட்டணத்தினால் பெரும் திண்டாட்டத்தில் தவித்து வருகின்றனர்.‘இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளும் தமிழக அரசும் முன்வராதா? அல்லது, கல்வி கட்டணம் குறித்து ஒரு கமிட்டி பரிசீலிக்க வருடக்கணக்கில் இழுத்தடித்து வருமா? மக்களின் இந்த அவலநிலை என்றுதான் மாறும்?’ என்று அனைத்து மக்களின் மனதிலும் பெருங்கேள்வியாக எழுந்துள்ளது.