ஸ்ரீரங்கத்தில் நாளை மாசி தெப்ப உற்சவம் இன்று நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி
2/16/2016 2:22:17 PM
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி வீதி உலா வந்தார். கடந்த 13ம் தேதி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாசி கருட சேவையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.6ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் நாளான இன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது.
நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து நாளை மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கிருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருள்கிறார். தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்த பின் மைய மண்டபத்தில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.