ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
2/4/2025 2:17:29 PM
திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் புதிதாக சித்தி புத்தி ஞானசுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், திரிபுரசுந்தரி சமேத வைதீஸ்வரர், தட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு துர்க்கை, நர்த்தன கணபதி, நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், பார்வதி அம்மன், கல்யாண நவகிரகம், பஞ்சபாண்டவர் திரவுபதியம்மன், ஐயப்பன், வெங்கடேச பெருமாள், ஹயக்கிரீவர், தன்வந்திரி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், சாய்பாபா மற்றும் 92 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு உள்ளது. கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. அதை தொடர்ந்து 10 மணிக்கு புனித நீர் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு உற்சவர் விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழாவில், அமைச்சர் பி.வி.ரமணா, எம்எல்ஏக்கள் மணிமாறன், வாலாஜாபாத் கணேசன், நகர மன்ற தலைவர் பூவை ஜி.ஆர்.திருமலை, துணை தலைவர் பூவை எம்.ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பூவை எம்.ஜெயக்குமார், கவுன்சிலர்கள் புகழேந்தி, நெல்சன் மற்றும் சந்திரசேகரன், ஜெ.சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம், பி.பிரபாகர், காஞ்சனா, ஜி.முரளிகுமார், பிரியா, டாக்டர் ஜி.பிரேம்குமார், டாக்டர் சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.