கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது
1/29/2016 4:42:49 PM
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு நேற்று 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது. கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றது. தொடர்ந்து அடுத்துள்ள மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து மாற்றி சென்றது.கடை உரிமையாளர் கண்ணனுக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்படவே அருகிலுள்ள தனியார் வங்கிக்கு சென்று அந்த ஆயிரம் ரூபாய் நோட்டை காட்டினார். அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுபற்றி கண்ணன் போலீசில் புகார் செய்தார். திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர்.
எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு கும்பலை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34), புதுத்தெரு அப்துல்லா (35), அஜ்மல் (20), மீரான்முகைதீன் (32) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரான அமீர் அப்பாஸ் என்பவரது கார் என்பதும், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அவரிடம் காரை வாங்கி கள்ள நோட்டுகளை கடத்தி வந்து அபிராமபட்டினத்திலிருந்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.