ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே ஏழரை ஆண்டாக இயங்காத சிக்னல் விபத்து ஏற்படும் அபாயம்
12/22/2015 2:33:29 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 முனை சந்திப்பில் ஏழரை ஆண்டாக பழுதாகி கிடக்கும் சிக்னலை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணா சிலை அருகில் திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், இவ்வழியாகத்தான் சென்னைக்கு செல்ல வேண்டும். இந்த 4 முனை சந்திப்பு வளைவில் இஷ்டத்துக்கு வாகனங்கள் திரும்பி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு முனை சந்திப்பில் கம்பங்கள் அமைக்கப்பட்டு சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த சிக்னல் 6 மாதங்களே செயல்பட்டது. கடந்த ஏழரை ஆண்டாக சிக்னல் இயங்காமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் சிக்னலை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.