செம்மஞ்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் மழைநீரில் மிதக்கும் வீடுகள் பரிதவிக்கும் அப்பாவி மக்கள்
11/25/2015 2:07:38 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மக்களை புரட்டி போட்டு விட்டது. சென்னையில் பல இடங்களில் ஏரிகள் உடைந்ததாலும் உபரிநீர் வெளியேறியதாலும் சாலைகள், வீடுகள் வெள்ளக்காடானது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து, தண்ணீர் நாலாபுறமும் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், செம்பாக்கம், தாழம்பூர் ஆகிய ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் நீர் தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர் நகர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இங்கு வசித்த மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என கருதி குழந்தைகளுடன் வெளியேறினர். இவர்கள் செம்மஞ்சேரியில் உள்ள தொடக்க பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு போதிய இட வசதி கிடையாது. உணவு மட்டும் வழங்கப்படுகிறது. மாற்று உடை கிடையாது. குழந்தைகளுக்கு ஆடை வழங்கப்படுவதில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 15 வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். சாலை, மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் வடிகால் வசதி இல்லை. நாங்கள் வசிக்கும் பகுதி தாழ்வானது என்பதால் லேசான மழை பெய்தால்கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஏரி உடைந்து எங்கள் பகுதிக்குள் புகுந்ததால் மார்பளவு தண்ணீர் தேங்கியது. உயிர் பிழைத்தால் போதும் என குழந்தைகளுடன் வெளியேறினோம். சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால்கூட எங்களது நிலைமை கேள்விகுறிதான்’ என்றனர்.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியிலும், உடைந்த ஏரியின் தண்ணீர் புகுந்தது. மாடி வீட்டின் கீழ்தளத்திலும் தண்ணீர் புகுந்தது. உணவு கிடைக்காமல் இங்கு வசிப்பவர்கள் தவிக்கின்றனர். வீடுகளில் பாம்பு, விஷ பூச்சிகள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சோழிங்கநல்லூர் காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஓஎம்ஆர் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே படுத்து கொள்கின்றனர். ஏனென்றால் இப்பகுதியில் திருட்டு சம்பவத்துக்கு பயந்து இங்கேயே இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேட்டுக்குப்பம் விஜிபி அவன்யூ, சிபிஎஸ் நகர் போன்ற பகுதிகளில் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பெருங்குடி கல்லுக்குட்டையில் 10 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாம்பு, தேள், விஷ பூச்சிகள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலானோர் மாடிகளில் தங்கியுள்ளனர். துரைப்பாக்கம் சாய்நகர், எம்சிஎன் நகரில் 1000 வீடுகளில் மழைநீர் புகுந்தது. கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. கடைக்கு செல்ல முடியவில்லை. வேலைக்கு செல்ல முடியவில்லை. வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் கோட்டூர்புரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி நீலாங்கரை அறிஞர் அண்ணா தெரு, சரஸ்வதி நகர், வெங்கடேஸ்வரா நகர், ராஜேந்திரா நகர், பாரதியார் நகர் மற்றும் துரைப்பாக்கம் பாண்டியன், நகர், கற்பக விநாயகா நகர், மகாத்மா காந்தி நகர், கஸ்தூரி பாய் நகர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆகிய பகுதிகளில் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இவர்கள் படகுகள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘4 நாட்களாக தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம். பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்து விட்டது. அரசு அதிகாரிகள் மெயின் ரோட்டில் மட்டும் பார்த்து விட்டு செல்கிறார்கள். உள்ளே வருவதில்லை. முகாம்களில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. 50 பேர் தங்கும் இடத்தில் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய பாய், போர்வை வழங்கப்படவில்லை. தரையில் படுத்து தூங்கும் அவல நிலை உள்ளது. குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. நீர்நிலைகளை பராமரிக்காததால்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. குளம், ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால்தான் இந்த அவலநிலை. எங்களுக்கு எப்போதுதான் விடிவு காலம் பிறக்குமோ?’ என்றனர்.