வடை சுட்டு விற்கும் 60 வயதான ராம் பாபு
11/17/2015 2:06:20 PM
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தெருவோரம் வடை சுட்டு விற்கும் 60 வயதான ராம் பாபுவை உங்களுக்கு தெரியுமா? அட இது என்ன வம்பு? அவரை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு ஒரு குட்டி செய்தி. உலகம் முழுவதும் சாதனை என்ற பெயரில் பனிகட்டியில் குளிப்பது, தீயில் சுடுவது என்ற ஜாலம் காட்டுவார்கள். ஆனால் ராம்பாபுவோ இது போன்ற கோணங்கித்தனம் எதுவும் செய்பவரில்லை. தனது அன்றாட வாழ்க்கை பாட்டிற்காக சுமார் 200 டிகிரியில் கொதிக்கும் எண்ணெய்யில் கூலாக கையை விட்டு வடை சுட்டு விற்கிறார். இதனால் இவருக்கு கையில் காயங்கள் எதுவும் இல்லை என்பது சிறப்பு அம்சம். அவ்வளவுதான். இதை பார்ப்பதற்கே ஏராளமானோர் இவரிடம் வந்து வடை வாங்கி சாப்பிடுகின்றனர். என்ன நம்மூரில் திருவிழாவில் பாட்டிகள் செய்யாததையா இவர் செய்து விட்டார் என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் வெளிநாட்டினருக்கு இதுவும் ஒரு அதிசயம் தானே? என்ன செய்ய. இதனால் வெளிநாட்டு இணைய தளங்களில் இவர்தான் பரபர செய்தி.