ஐப்பசி பவுர்ணமியையொட்டி கங்கைகொண்டசோழபுரத்தில் நாளை அன்னாபிஷேகம்
10/26/2015 3:00:39 PM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றிபெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து காலை 11 மணிமுதல் கோயிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணியளவில் தீபாராதனை செய்யப்படும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது.
இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நாளை பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு வரும் நேற்று கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகம் நடந்தது.இன்று காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு அன்னம் பிரசாதம் வழங்கல் நடக்கிறது.தொடர்ந்து 28ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் முடிந்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடும். மீதமுள்ள சாதம் ஏரிகுளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்க படும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.