திருப்பதியில் 4ம்நாள் பிரம்மோற்சவம் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
10/17/2015 12:05:36 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.3ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அவதாரத்தில் சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.4ம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’...‘கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.இன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவத்தில் உள்ள சர்வபூபால வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.