சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை இன்ஸ்பெக்டர் உட்பட 25 பேர் கைதாகின்றனர்
10/8/2025 3:43:20 PM
சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக மதுரை இன்ஸ்பெக்டர் உட்பட 25 பேர் வரை கைதாகின்றனர். நேற்று எஸ்ஐ உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (47). இவர் சிஆர்பிஎப் போலீசாக இருந்து டிஸ்மிஸ் ஆனவர். இவரது மகன் கார்த்திக் (20). மகள் சுகந்தி (17 பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோயம்புத்தூர் சென்ற சுகந்தி, அங்கு தனது அத்தை செல்வியிடம், தன்னை பல ஆண்டுகளாக தந்தை மற்றும் அண்ணன் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் செல்வி புகார் செய்தார். இதன் அடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வின்சென்ட் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ஸ்ரீசுகந்தியை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏடிஜிபி வரை உயர் அலுவலர்கள் பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமை நடந்துள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி, சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, சுகந்தியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ சங்கர் (55), சுரேஷ்குமார் (32), செந்தில்குமார் (36), அரவிந்த் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சுகந்தியின் மாமன் முறை உறவினர்கள். அரவிந்த், சுகந்தியின் அண்ணன் கார்த்தியின் நண்பர். இந்த வழக்கில் சுகந்தி வீட்டின் அருகே வசித்த கண்டக்டர் உள்ளிட்ட மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பாலியல் தொடர்பான தகவல் வெளியானவுடன் எஸ்.எஸ்.ஐ சங்கரை, தேவகோட்டைக்கு டிரான்ஸ்பர் செய்து நேற்று முன்தினம் எஸ்.பி துரை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், சிறுமியை பலாத்காரம் செய்த பிரச்னையில் மதுரை இன்ஸ்பெக்டர், சிவகங்கை அரசு பஸ் கண்டக்டருக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இவர்களோடு 25 பேர் வரை கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.