ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அலட்சியம் காட்டும் அதிமுக அரசு கருணாநிதி கண்டனம்
10/8/2025 3:38:05 PM
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்த தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோ இல்லை. ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது. வேறு வழியில்லாமல் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தி முடித்துவிட்ட போதிலும், அரசு இயங்குகிறதா என்றே தெரியவில்லை. லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் அமைச்சர், லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதிநிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேசவில்லை.
அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது. அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசிவிட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா? கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து “ஜேக்டோ” அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில், இதுவரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் “ஜேக்டோ” அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அதிமுக அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன்வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உற்பத்தியாகும் பாலை அரசே முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்து விட்டது. விவசாயிகள் பாலைக் கறந்து கூட்டுறவு சங்கங்களுக்குக் கொண்டு வந்தால், அந்தப் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தையும் உடனடியாகப் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிக்கிறார்களாம். ‘கமிஷன்’ கொள்ளை நடத்துவதற்காக, தனியார் வியாபாரிகள் இடைத்தரகர்கள் மூலமாக பாலைக் கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்கிறார்கள். பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், அவர்கள் ஆங்காங்கு கறந்த பாலை சாலையிலே கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைப் போராட்டம் நடத்தியும், இந்த அரசினர் அதைப்பற்றிக் கவலையே படுவதில்லை. ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக் கணக்கான ரூபாய் ஊழல் வெளி வந்து, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டார். அதற்குப் பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ? அந்த வழக்கே குப்பைக் கூடைக்குப் போய் விட்டது.
தற்போது பால் உற்பத்தி 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது என்றும், அதேநேரம் பால் கொள்முதல் விலை முறைப்படுத்தப்படாத காரணத்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்படு கிறது என்றும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. இதனைத் தவிர்க்க, ஆவின் நிறுவனமே உற்பத்தியாகும் எல்லா பாலையும் கொள்முதல் செய்து, பவுடராக மாற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கிட அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசின் தகவல்படி, தமிழகத்தில் 2012-2013-ல் நாள்ஒன்றுக்கு 1.54 கோடி லிட்டராக இருந்த பால் உற்பத்தி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. ஆனாலும் ஆவின் நிறுவனம், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே கொள்முதல் செய்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள மீதப் பாலை தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 28 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால், தனியார் பால் பெரிய நிறுவனங்கள் லிட்டர் 22 ரூபாய்க்கும், சிறிய அளவிலான வியாபாரிகள் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் தான் கொள்முதல் செய்கிறார்கள். இதன் காரணமாகத் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் இந்தப் பிரச்சினையைப் போக்க அதிமுக அரசு ஆவின் நிறுவனம் மூலமாக உற்பத்தியாளர்களிடம் உள்ள எல்லா பாலையும் அதற்குரிய பணத்தை கொடுத்து, தானே கொள்முதல் செய்து, பாலாக மக்களுக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள பாலை பவுடராக மாற்றி சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அந்தப் பால் பவுடரைப் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.