வில்லிவாக்கத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
10/8/2025 3:34:50 PM
அண்ணாநகர்: சென்னை, வில்லிவாக்கம், தான்தோன்றி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வின். இவரது மனைவி மார்க்கரெட் (40). இவர் நேற்றிரவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.அதே தெருவில் மார்க்கரெட் நடந்து வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர். இவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச்சரடை மர்ம ஆசாமிகள் பறித்தனர்.அப்போது மார்க்கரெட் கத்தி கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடிவருவதைப் பார்த்ததும் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் மார்க்கரெட் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.வில்லிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் வழிப்பறி ஆசாமிகள் தொடர்ந்து நகைகளைக் கொள்ளையடித்து கைவரிசை காட்டி வருகின்றனர்.இதைத் தடுக்க, இப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.