கள்ளக்காதலுக்கு இடையூறு 2 குழந்தைகளை கொன்ற தாய், பாட்டிக்கு சிறை பெத்த மனம் கல்லு?
10/8/2025 2:41:40 PM
ஈரோடு:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற தாய், பாட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஈஸ்வரன் (29). சென்னையில், தோல் தொழிற்சாலை ஒன்றில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (25). இவர்களுக்கு ரிதீஷ் (5), அன்பரசு (2) ஆகிய 2 மகன்கள்.ஈஸ்வரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ரஞ்சிதா, தாய் சிவகாமியுடன், சித்தோடு கொங்கம்பாளையத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாலை குழந்தைகள் இருவரும் படுக்கையில் பிணமாக கிடந்தனர். குழந்தைகளுக்கு, சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரையை தேங்காய் எண்ணெய் கலந்த சாதத்துடன் ஊட்டி விட்டதாகவும், குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று ரஞ்சிதா கூறினார்.குழந்தைகள் சாவில் மர்மம் உள்ளது என்று தந்தை ஈஸ்வரன், சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தைகள் அருந்திய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது பிரேத பரிசோதனை தொடர்பான ஆய்வில் தெரியவந்தது.இதையடுத்து ரஞ்சிதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்து கொலை செய்ததையும், அவருக்கு உடந்தையாக அவரது தாயார் சிவகாமி (45) இருந்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து ரஞ்சிதாவும், சிவகாமியையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.