சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்கள் பலி : பாதுகாப்பு படையினர் அதிரடி
10/8/2025 2:39:21 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டார் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். நாட்டில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள மாநிலங்களில் சட்டீஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பஸ்டார் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களை முறியடிக்க மாநில போலீசாருக்கு துணையாக மத்திய போலீசாரும் முகாமிட்டுள்ளனர். நேற்று மாலை சந்தா மேட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான சண்டை மூண்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த சண்டையில் 7 மாவோயிஸ்ட்கள் பலியானார்கள். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட். அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையில் சுக்மா மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.