உள்நாட்டு போர் விமானங்களை பயன்படுத்த இந்திய விமானப்படைக்கு மோடி உத்தரவு
10/8/2025 2:38:49 PM
புதுடெல்லி: இந்திய விமானப்படையில் அதிக அளவில் உள்நாட்டு போர் விமானங்களை பயன்படுத்த வேண்டும் என மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு போர் விமானங்கள் வாங்க வேண்டும் என்ற விமானப்படையின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்திய விமானப்படை தேவைக்காக பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வடிவமைத்த தேஜாஸ் என்ற போர்விமானம் தயாரிக்கும் பணி கடந்த 83ம் ஆண்டு தொடங்கியது. 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஒரு விமானம் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்துக்காக விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் இந்திய விமானப்படையில் குறைந்து வரும் போர் விமானங்கள் எண்ணிக்கையை சரி செய்ய வெளிநாட்டிலிருந்து விமானங்கள் வாங்க வேண்டும் என விமானப்படை தளபதிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் தயாராகும் ஆயுதங்களை ராணுவத்தின் முன்று படை பிரிவுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க 45 விமான படை பிரிவு தேவை என இந்திய விமானப்படை தளபதிகள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியா வசம் தற்போது 35 விமானபடை பிரிவுகள் உள்ளன. ஆனால் இதில் உள்ள விமானங்கள் பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவை. இவை அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஏற்கனவே பல விமானங்கள் விபத்தில் நொறுங்கிவிட்டன.
இந்நிலையில் மிகவும் பழையதாகி போன 21 மிக் போர் விமானங்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானப்படை பிரிவு 25 ஆக குறைந்துவிடும் அபாயம் உள்ளது. இவற்றுக்கு பதிலாக பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச போர் விமானங்கள் எண்ணிக்கையை பராமரிக்க இன்னும் 53 போர் விமானங்கள் தேவை. 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க முதல் கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 17 போர் விமானங்களுக்கு தேஜாஸ் விமானங்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 16 தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்படும் என இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.