லாலு பிரசாத்திடம் கருப்பு பணம் பாஜ தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு
10/8/2025 2:38:23 PM
பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் கருப்பு பணம் இருப்பதாகவும், அதை வைத்து பால் பண்ணை நடத்தி வருவதாகவும் பாஜ மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் அங்கு தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாஜ சார்பில் பிரதமர் நரேந்திரமோடி இன்று 4 பிரசாரக் கூட்டங்களில் பேச இருக்கிறார். இதற்கிடையில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நரமாமிசம் சாப்பிடுபவர் என பாஜ தலைவர் அமித்ஷாவை ஆர்ஜேடி தலைவர் லாலு தாக்கி பேசியிருந்தார். லாலுவை கொள்ளைக்காரன் என அமித்ஷா விமர்சித்தார். தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் அடுத்தவர்களை தாக்கி பேசிய குற்றத்துக்காக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவிடம் கருப்பு பணம் இருப்பதாக பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பசுக்களின் மீது மிகுந்த பாசம் இருப்பதாகவும், சொந்தமாக 400 பசுக்களை வளர்த்து வருவதாகவும் லாலு கூறியிருக்கிறார். பசுக்களின் மீது அவருக்கு உண்மையில் பாசம் இல்லை. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கிடைத்த கருப்பு பணத்தை மறைக்க பசுக்களை வைத்து பால் பண்ணை நடத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில், இந்துக்கள் புனிதாக கருதும் பசுவின் மீது உண்மையாக மரியாதை இருக்கும் பட்சத்தில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக அவர் பேசியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.