2வது திருமண விவகாரம் எம்எல்ஏ பரஞ்சோதி மீதான வழக்கு: மகிளா நீதிமன்றத்தில் விசாரணை
10/8/2025 2:30:38 PM
திருச்சி: திருச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராணி (49). இவர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் 2011 டிசம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், 2008ம் ஆண்டு எம்எல்ஏ பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்ததாகவும், தேர்தல் செலவுக்காக 60 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி 4வது குற்றவியல் கோர்ட்டில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து ராணி தரப்பில், பரஞ்சோதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏ பரஞ்சோதி உள்பட 3 பேருக்கும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி குற்றப்பத்திாிகை நகல் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த வழக்கின் விசாரணை நடந்த போது, பெண்களுக்கு எதிரான வழக்கு என்பதால் கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த வழக்கு கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் (பொ) ரகானாபேகம், வழக்கின் விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.