பீர்க்கன்காரணையில் டிரான்ஸ்பார்மர் அருகே சைக்கிள் நிறுத்தம் மாணவ, மாணவிகள் அவதி
10/8/2025 2:18:11 PM
தாம்பரம்: தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவியர், அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகேயும், அதன் கீழ்ப்பகுதியிலும் தங்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். இங்கு ஆபத்தான பள்ளி, பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பீர்க்கன்காரணை பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு சைக்கிள்களில் வரும் மாணவ மாணவிகள், தங்களின் சைக்கிள்களை பள்ளிக்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பகுதியிலும், அதற்குக் கீழேயும் நிறுத்திவிட்டு, பள்ளிக்குள் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
அந்த டிரான்ஸ்பார்மர் எந்நேரமும் வெடிக்கும் நிலையில் உள்ளதால், அங்கு சைக்கிள்களை நிறுத்திவிட்டு எடுப்பதற்குள் மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனர்.பள்ளிக்கு வெளியே டிரான்ஸ்பார்மர் அருகே நிறுத்திவிட்டு செல்லும் சைக்கிள்களுக்கு பாதுகாப்பும் இல்லை. தெருவை அடைத்தபடி டிரான்ஸ்பார்மர் அருகே பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் நிற்பதால், அப்பகுதிவாசிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் அங்கு நிறுத்தப்படும் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களும் திருடு போய்விடுகின்றன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அவர்களின் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.