கும்மிடிப்பூண்டி அருகே 2 போலி டாக்டர்கள் கைது
10/8/2025 2:17:46 PM
ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை மற்றும் எளாவூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த சதாசிவம் (72), ரூபேந்திரகுமார் (35) ஆகிய 2 போலி டாக்டர்களை நேற்று சுகாதார துறையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, எளாவூர் பகுதிகளில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மோகனன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளிகிருஷ்ணன், வஜ்ரவேலு மற்றும் 2 மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின்போது, கவரப்பேட்டை பகுதியில் ஆயுர்வேதம் படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த சதாசிவம் என்பவரை பிடித்து, கவரப்பேட்டை போலீசாருக்கு மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து சதாசிவத்தை கவரப்பேட்டை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இதேபோல், எளாவூர் பகுதியில் ஆயுர்வேதம் படித்து, ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த ரூபேந்திரகுமார் என்பவரை மருத்துவ குழுவினர் பிடித்து, ஆரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரூபேந்திரகுமாரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.