மெரினா கடற்கரை சாலையில் பஸ் மீது ஆட்டோ மோதி உருண்டது: 2 பேர் பரிதாப பலி
10/8/2025 2:15:32 PM
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் பஸ் மீது ஆட்டோ மோதியதில் 2 பேர் பலியானார்கள்.சென்னை, புளியந்தோப்பு, சுந்தரபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் காமராஜ் (55). ஆட்டோ டிரைவர். இன்று காலை 6 மணியளவில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி லதா (44) என்பவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பட்டினப்பாக்கத்தில் இருந்து காமராஜர் சாலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு கிளம்பினார்.லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அருகே இன்று காலை 6.15 மணியளவில் ஆட்டோவை காமராஜ் இடதுபுறமாக திருப்பினார். அப்போது சாலை திருப்பத்தில் இருந்த பேரிகார்டில் ஆட்டோ மோதியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே ஆட்டோ ஓடியது.அப்போது எதிரே பிராட்வேயில் இருந்து கிண்டி செல்லும் 21ஜி மாநகர பேருந்தின்மீது ஆட்டோ வேகமாக மோதி உருண்டு கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் காமராஜ் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
ஆட்டோவில் வந்த மீன் வியாபாரி லதா படுகாயங்களுடன் சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லதாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் லதா பரிதாபமாக பலியானார்.சம்பவ இடத்தில் பலியான காமராஜின் உடலை போலீசார் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பம்மலை சேர்ந்த பஸ் டிரைவர் குமார் (53) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.