மதுராந்தகம் அருகே ஆசிரியர் பாலியல் தொல்லை : மாணவி தற்கொலை : கிராம மக்கள் சாலை மறியல்: காவல் நிலையம் முற்றுகை
10/8/2025 2:05:46 PM
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை கைது செய்யக் கோரி மக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவரதுமகள் சுமதி (17, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.)இவர், செய்யூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். படிப்பிலும் விளையாட்டு போட்டிகளிலும் எப்போதும் முதலிடம்வருவார்.இந்நிலையில், இன்று காலை சுமதியை பள்ளிக்கு அனுப்புவதற்காக பெற்றோர் அவரது அறைக் கதவை பலமுறை தட்டினர். திறக்கவில்லை. உடனே பலமாக இடித்து கதவை திறந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் சுமதி கிடந்தார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
சுமதி படுக்கும் கட்டிலில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், ‘எனது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். பள்ளி ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல், கிராமத்தில் தீயாகப் பரவியது.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சித்தாமூர்-செய்யூர் சாலையில் அனைத்து கிராம மக்களும் ஒன்றுகூடி, ‘சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் செய்யூர் போலீசாரும் மாவட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களுடன் சமாதானபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் மக்கள் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.இதற்கிடையே செய் யூர் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை யிட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.