உயிருக்கு ஆபத்தான நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து டெல்லியில் தீவிர சிகிச்சை
10/7/2025 2:40:05 PM
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நரம்பில் தீவிர ரத்த உறைதல் (டிவிடி) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய பாதிப்பு ஆகும். இதனால் சாதாரண ரத்த ஓட்டம் தடைபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்கட்ட சிகிச்சைகளுக்கு பின் ஆபத்தான கட்டத்தில் இருந்து சித்து மீண்டு விட்டதாக, மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்த சிக்சர் சித்து என அழைக்கப்படும் நவ்ஜோத் சிங் சித்து, 1983-1999 கால கட்டத்தில் 51 டெஸ்ட் மற்றும் 136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் தொகுதியின் எம்பியாகவும் இரண்டு முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கீழே விழுந்தாலும் ஆட்டமிழந்து விட மாட்டேன். கடவுளின் கருணையுடன் இதில் இருந்து மீண்டு வருவேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் சித்து தெரிவித்துள்ளார்.