சமூக விரோதிகளின் கூடாரமான கோயம்பேடு பேருந்து நிலையம்
10/3/2025 12:09:41 PM
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயம்பேடு பகுதியில் காய், கனி, பூ மொத்த அங்காடிகள் வந்ததைத் தொடர்ந்து, இங்கு வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.இப்பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் உதவி மையத்தின் மூலம் அனைத்து பணிகளும் பேருந்து நிலைய போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.ஊழியர்களின் அவலம்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வறைகள் இல்லை. அவர்கள் பிளாட்பாரங்களிலும் பேருந்துகளிலும் படுத்து ஓய்வெடுத்து வருகின்றனர்.
மேலும், இங்கு பேருந்துகளைப் பராமரிக்கவும் சுத்தம் செய்யவும் பழுதுபார்ப்பு நிலையங்கள் இல்லை. இதனால் அப்பேருந்துகளில் ஏற்படும் சிறு குறைகளைக்கூட நிவர்த்தி செய்ய முடியாமல், அப்பேருந்துகள் பழுதான நிலையிலேயே சென்று, நடுவழியில் பரிதாபமாக நின்றுவிடுவதோ, அல்லது விபத்திலோ சிக்குகின்றன.பிளாட்பாரம் ஆக்கிரமிப்புகோயம்பேடு பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்ட கடைகள், பெரும்பாலான பிளாட்பார பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள், பஸ்கள் செல்லும் பாதையில் நடக்க வேண்டிய அவலநிலை உள்ளது.மேலும், பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலும் பெரும்பகுதி இடங்களை ஆக்கிரமித்து உள்ளன.
இவர்களுடன் வெளியூரில் இருந்து கோயம்பேட்டில் தங்கி கூலிவேலை செய்பவர்களும் ஆக்கிரமித்து உள்ளனர். இவர்கள் அங்குள்ள கழிவறை மற்றும் குளியலறையை செலவில்லாத விடுதியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் இங்கு பல்வேறு வழிப்பறி, கொலை, கொள்ளை, கஞ்சா உட்பட பல்வேறு போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் ஆள் கடத்தல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் நடைபெறுவதாக கூறப்படுகிறது.உதாரணத்துக்கு, கடந்த 1-ம் தேதி நள்ளிரவு திருவண்ணாமலையை சேர்ந்த செக்யூரிட்டி வெங்கடேஷ் என்பவர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பஸ்சில் வந்திறங்கினார்.
அங்கு அவருக்கு அம்பத்தூருக்கு செல்ல பேருந்து இல்லாததால் அன்றிரவு பேருந்து நிலையத்திலேயே தூங்கினார். மறுநாள் காலை அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம் பணம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் செல்போன் பறிபோனது.இதேபோல், கடந்த மாதம் 27-ம் தேதி இரவு மதுராந்தகத்தை சேர்ந்த சந்திரா (22), தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கினார். மறுநாள் விடியற்காலைக்குள் அவரது குழந்தையை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர்.இதுபோன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் அளிக்கப்படும் புகார்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது,
போலீஸ் பற்றாக்குறை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாக பேருந்து நிலைய காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இங்கு குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.‘எங்களுக்கு நாள்தோறும் பல்வேறு பணிகள் தரப்படுவதால், பேருந்து நிலைய பாதுகாப்பை மேற்கொள்ள முடியவில்லை’ என்று போலீசாரும் புலம்புகின்றனர்.ஆட்டோக்கள் ஆக்கிரமிப்புகோயம்பேடு 100 அடி சாலையில் பேருந்து நிலையத்துக்கு மாநகர பேருந்துகள் உள்ளே சென்று வரும் பகுதியிலும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், காளியம்மன் சாலை வழியாக பேருந்து நிலையத்துக்குள் வர வழி செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், இரு பக்கமும் பேருந்துகள் செல்ல வழி இல்லாமல் ஆட்டோக்களும் கால்டாக்சிகளும் எந்நேரமும் வழிமறித்து நிறுத்தப்படுகின்றன.வெளியூர் பேருந்தில் இருந்து பயணிகள் இறங்குவதற்குள், அவர்களை ஆட்டோ, கால்டாக்சி டிரைவர்களும் முற்றுகையிடுகின்றனர். அவர்களின் ஆக்கிரமிப்பை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை.சாலையில் மாடுகள் அணிவகுப்புகாளியம்மன் சாலையிலேயே கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வழியும் இருப்பதால், அங்கு எந்நேரமும் மாடுகள் குறுக்கே சென்று வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர், ஆளும்கட்சி பிரமுகர் ஒருவராம். இதனால் அவற்றை அகற்ற முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
மொத்தத்தில், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை சுற்றிலும் ஆளும்கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் சமூகவிரோத கும்பல்கள் எந்நேரமும் சுற்றி வந்து, அங்கு வரும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதால், வெளியூருக்கு செல்லும் மற்றும் இரவில் தங்கும் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகின்றது.