கண்ணுக்கு தெரியாமல் பாலைவனமாகிறது சென்னை: கொள்ளை கட்டணம் வசூலிக்கும் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு வருமா?
9/30/2015 2:19:11 PM
சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி குடிநீர் வாரியம் வீடுகளுக்கு வழங்கும் குழாயில் ஒரு நாளைக்கு ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ மிகவும் குறைவாகவே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் குடிநீரும் குடிக்க முடியாத நிலையில் மிகவும் கலங்கலாக இருப்பதாக பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநகராட்சி குடிநீர் லாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் உடனடியாக வருவதில்லை என்றும், ஓரிரு நாட்கள் தாமதித்து வரும் அந்த லாரிகளும் போதிய நீரை கொடுப்பதுமில்லை என்றும் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தண்ணீர் லாரிகள் கொள்ளை லாபத்தில் தண்ணீரை விற்பனை செய்து வருகின்றன என்ற புகார்களும் உள்ளன. சென்னையில் மட்டும் குடிநீர் வாரிய லாரிகள், தனியார் லாரிகள் என தினமும் 1500க்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களின் நீராதாரத்தையே நம்பி உள்ளன. தென்சென்னைக்கு நீர் வழங்கும் லாரிகள் மேடவாக்கம், திருப்போரூர் இடையிலான கிராமங்களில் உள்ள நிலத்தடி நீரை எடுத்து வந்து வழங்கி வருகின்றன.
ஆனால் இவ்வாறு எடுத்து வரும் லாரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதாக தெரியவில்லை. அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் குறைவான தொகையை கொடுத்து விட்டு தண்ணீர் எடுத்து வரும் லாரிகள் நகருக்குள் அநியாய விலைக்கு விற்பனை செய்கின்றன என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதே போல் வட சென்னைக்கு செந்நீர் குப்பம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரை போர் போட்டு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மாவட்டங்களின் நிலத்தடி நீரும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டன. இதனால் புதிய நீர் ஆதாரங்களை தேடி தண்ணீர் லாரிகள் கோர பிசாசுகளை போல அலையத் தொடங்கியுள்ளன. படிப்படியாக கண்ணுக்கு தெரியாத பாலைவனத்தை சென்னை நகரை சுற்றி இந்த தண்ணீர் லாரிகளும், போர்வெல்களும் உருவாக்கி வருகின்றன.
எதிர்காலத்தில் மிகப் பெரிய குடிநீர் அபாயத்தை சந்திக்க சென்னை இப்போதே அச்சாரம் போடத் தொடங்கிவிட்டது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் பத்து ட்ரிப்களை அடிக்கும் லாரிகள் ஏழு அல்லது எட்டு ட்ரிப்கள்தான் செல்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள வெண்பேடு, ஈச்சங்காடு, திருமழிசை, காரனோடை, காயாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து இந்த ஆண்டு கட்டணம் செலுத்தி நீர் எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு தண்ணீரை எடுத்து வரும் லாரிகளுக்கு மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில் 20 ஆயிரம் லிட்டருக்கு ரூ.2200 மற்றும் 12 ஆயிரம் கொள்ளளவு கொண்ட லாரிகளுக்கு ரூ.1200 கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் எத்தனை லாரிகள் முறையாக கட்டணத்தை கட்டி தண்ணீர் சப்ளை செய்கின்றன என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம். ஆனால் இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாலும், அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதாலும், வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது என்று பகிரங்கமாகவே அதிக கட்டணம் வசூலிப்பதை பற்றி கூறுகின்றனர். ஆனால் இதை அதிகாரிகளும், அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்களுக்கு அடிப்படை ஆதாரமான நீரை வழங்க வேண்டிய அரசே குடிநீரை விற்பனை செய்கிறது. மறுபுறத்தில் இது போன்ற குடிநீர் லாரிகளின் கொள்ளை கட்டணத்தால் பொதுமக்கள் வழிதெரியாது விழி பிதுங்கி தவித்து வருகின்றனர்.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளுர் பகுதிகளில் இருந்து ஏராளமான குடிநீர் லாரிகள் நாள்தோறும் நகருக்குள் வந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. உட்புறச் சாலைகள் குறுகலாக உள்ள பகுதிகளில் தண்ணீர் லாரி நிறுத்தப்பட்டிருந்தால் வேறு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள் ளது. இது போன்று பல்வேறு பகுதிகளிலும் சிறு தெருக்களில் கூட லாரிகளை நிறுத்தி வைத்து பல மணிநேரம் தண்ணீர் விற்பனை செய்வதால் வேறு எந்த வாகனங்களும் சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது.
இரவு நேரங்களில், அதிகாலை நேரங்களில் வரும் தண்ணீர் லாரிகளால் மக்களின் தூக்கம் கெட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு வீடுகள், சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு அலட்சியமாக இந்த லாரிகள் செல்கின்றன. இவ்வாறு தண்ணீர் லாரிகள் சென்னை வாசிகளை அச்சுறுத்தும் புதிய மிருகமாக மாறி நகரத்திற்குள் அலைய தொடங்கியுள்ளது. இவை அனைத்திற்கும் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் அலட்சிய போக்கே காரணம். கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றும் மையங்கள் இருந்த போதிலும் தொடர்ந்து சென்னை வாசிகளுக்கு போதிய நீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி நகர் முழுவதும் அனுமதி பெற்ற, பெறாத ஏராளமான மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் தண்ணீர் வியாபாரம் வேறு மறுபுறம் அநியாய கொள்ளையில் இறங்கியுள்ளது. இவை முறையாக சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறதா என்ற ஆய்வும் அதிகாரிகளால் நடத்தப்படுவதே இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னைவாசிகளின் குடிநீர் தாகத்தை தணித்து, லாரிகளுக்கு போதிய கட்டுப்பாடு விதித்து முறையாக தண்ணீர் கிடைக்க மாநகராட்சி வழிவகுக்குமா என்பதே சென்னை வாசிகள் முன்பாக உள்ள மில்லியன் டாலர் கேள்வி.