உயரம் குறைந்த நடைமேடைகள் உயிர் பயத்தில் பயணிகள்: அடிப்படை வசதிகள் கூட இல்லாத கோட்டை ரயில்நிலையம்
9/28/2015 2:35:55 PM
சென்னை கடற்கரை - தாம்பரம் வழிதடத்தில் உள்ள முக்கிய, முதல் ரயில்நிலையம்தான் சென்னைக் கோட்டை ரயில்நிலையம். அதுமட்டுமின்றி சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் வழிதடத்திலும் இந்த ரயில்நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையம் அருகே உயர்நீதிமன்றம், குறளகம், பேருந்து நிலையம், சட்ட உதவி மையம், பல் மருத்துவக்கல்லூரி, பூக்கடை இணைப்பகம், அரசு, தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை உள்ளன. அதனால் இந்த ரயில்நிலையம் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துச் செல்கின்றனர். அதனால் எப்போதும் கோட்டை ரயில்நிலையம் பரபரப்பாக காணப்படும். மேலும் தென் பகுதியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இங்கு வந்து பின்னர் சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்வது வழக்கம். எனவே தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகளும் இங்கு வந்து செல்வர்.
இப்படி பரபரப்பாக இருக்கும் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் வேதனை. மொத்தம் 5 நடைமேடைகள் உள்ளன. ஒரு நடைமேடையில் கூட குடிநீர் வசதி இல்லை. இதனால் மதிய வேளைகளில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பாடு திண்டாட்டமாக அமைந்து விடுகிறது. இருக்கும் குழாய்களில் தண்ணீர் வருவேதயில்லை. அது மட்டம் இல்லாமல் குப்பை தொட்டியாகவும், எச்சில் துப்பும் இடமாகவும் மாறி இருக்கின்றன. அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துச் செல்லும் ரயில்நிலையத்தில் கழிவறை வசதி இல்லை. அதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். நடைமேடை கூரைகள் சில இடங்களில் உடைந்துகிடப்பதால் மழைக்காலம் வந்து விட்டால் மழைநீர் தாரளமாக நிலையத்திற்குள் வந்து பயணிகளை நனைக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பயணிகள் நிற்பதற்கு முடியாமல் ஈரத்தில் அவதிப்படும் நிலையும் உள்ளது.
இந்த ரயில்நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்துச் செல்ல எந்த வசதியும் கிடையாது. எந்தப்பக்கம் வந்தாலும் தலா 42 படிகள் ஏறி, இறங்க வேண்டும். முக்கியமாக செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து வரும் விரைவு மின்சார ரயில்கள் எப்போதும் நிற்கும் 3வது நடைமேடையின் நீளம் குறைவு. அதனால் தாம்பரம் வழித்தடத்தில் இருந்து வரும் விரைவு மின்சார ரயிலின் கடைசி பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கின்றன. அதனால் இந்தப்பெட்டிகளில் ஏறும் பயணிகள் கோட்டை ரயில்நிலையத்தில் இறங்க முடியாமல் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளன. இதனால் ரயிலில் ஏறி இறங்கும் போது பயணிகள் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே எந்த நேரத்திலும் பயணிகள் உயிர் பயத்துடன் இருக்க வேண்டிய நிலை. இத்தனை அபாயகரமாக இருந்த போதிலும் அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்களின் உயிரை அலட்சியமாக நினைக்கும் அதிகாரிகளால் பயணிகள் அன்றாடம் பெரிதும் அவதிக்கு ஆளாகும் நிலை உள்ளது.
அதேபோல் பறக்கும் ரயில்கள் வந்துச் செல்லும் நடைமேடைகளிலும் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. நடைமேடையின் உயரம் குறைவு. அதனால் படிகள் இல்லாத மின்சார ரயிலில் இருந்து இறங்குவதற்கு பொதுமக்கள், வயதானவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதிதாக வரும் பயணிகள் வழக்கமான உயரத்தில் நடைமேடை இருக்கும் என நினைத்து இறங்குபவர்கள் விழுந்து எழுவது வாடிக்கையாக உள்ளது. வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி மற்ற பயணிகளுக்கும் 4,5வது நடைமேடைகளில் இறங்கி ஏறுவது சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் பயணிகள் விழுந்து பலமாக அடிபட்டு காயம் ஏற்படும் அளவுக்கு வேதனைச் சம்பவங்களும் தொடர்கின்றன.
அதிலும் கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 6 லிருந்து 9 பெட்டியாக சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட பிறகு இந்த பிரச்னையும் இன்னும் அதிகரித்து இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாக ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அதற்கு ஏற்ற வகையில் நடைபாதைகளின் நீளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனால் பயணிகள் விபத்தில் சிக்காமல் ஏறி இறங்க வசதியாக அமையும். ஆனால் இங்கு அந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றபடவில்லை. பயணச்சீ்ட்டு மையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பெரும்பாலும் செயல்படுவதில்லை. வெறும் காட்சி போல நிற்கும் அதை பயணிகள் வேதனையுடன் பார்த்து விட்டு நெரிசலான நேரங்களில் கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இத்தனையும் இந்த தானியங்கி இயந்திரங்களை பராமரித்து , பழுது நீக்கும் அலுவலங்கள் இந்த ரயில்நிலையத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் கோட்டை ரயில்நிலையம் ஆதார் ரயில்நிலையமாக பல ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையாக அமல் படுத்தியிருந்தால் கோட்டை ரயில்நிலையம் அடிப்படை வசதிகள், நவீன வசதிகள் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கும். அறிவிப்பு பெயரளவுக்கு அப்படியே உள்ளது. அதனால் பயணிகள் அவதிப்படுவதும் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.
இ்ந்தியாவிலேயே தமிழகத்தில்தான் செல்போன் டிக்கெட் முறை உள்ளிட்ட பல்வேறு சோதனை முயற்சிகளும் மத்திய அரசால் செய்து பார்க்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. அதே போல் அதிக வருவாய் கொண்ட துறையாகவும் இது விளங்கி வருகிறது. இருந்த போதிலும் போதிய வசதிகள் செய்து தரப்படாததாலும், மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகும் கோட்டை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படாததாலும் பல்வேறு வசதிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அதே போல் சென்னையில் உள்ள பல்வேறு மெட்ரோ நிலையங்களையும் தூய்மைப்படுத்தி பயணிகள் அச்சம் இன்றியும், வசதியாகவும் வந்து செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, நடை பாதைகள் நீட்டிக்கப்பட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா என்பதே தற்போது சென்னைவாசிகள் முன் உள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.