திருப்பதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 வாலிபர்கள் இறந்தது எப்படி?: உருக்கமான தகவல்கள்
9/28/2015 2:25:09 PM
திருமலை: திருப்பதியில் உள்ள கபில தீர்த்தத்திற்கு மேல் பகுதியில் குட்டை உள்ளது. இதில் திருப்பதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேற்று குளித்தனர். திருமலையில் கனமழை பெய்துகொண்டிருந்ததால் மாலை 4 மணியளவில் வாலிபர்கள் குளித்துக்கொண்டிருந்த குட்டை பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் பயங்கர சத்தத்துடன் பாய்ந்து வந்தது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அங்கு யாரும் இல்லாததால் அவர்களை மீட்கவோ அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்கவோ முடியவில்லை.
இந்நிலையில் கபிலதீர்த்த தெப்பக்குளத்தில் 4 சடலங்கள் அடித்து வரப்பட்டிருந்தது. அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாபுஜான் என்பவர், இறந்தவர்கள் திருப்பதி சந்திரசேகர் ரெட்டி காலனியை சேர்ந்த தோகித், மங்கலத்தை சேர்ந்த காந்த் என 2 பேரை அடையாளம் காட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அனைவரும் மெக்கானிக் வேலை செய்துவருகிறோம். வெங்கடேஷ், காந்த், தோகித் மற்றும் நான் ஆகிய 4 பேரும் கபில தீர்த்த மலைமீதுள்ள முதலாவது பிளேட் அருகே குளிக்க சென்றோம். எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் கரையில் அமர்ந்திருந்ேதன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வந்த வெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அடித்து செல்லப்பட்டனர். என்னுடன் வந்தவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வெங்கடேஷ் என்ன ஆனார் என தெரியவில்லை என கூறி கதறி அழுதார்.
இதுகுறித்து அலிபிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் 2 சடலங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் போலீசார், கபில தீர்த்தத்தில் உள்ள குளத்தில் இருந்த தண்ணீரை பம்ப்மூலம் வெளியேற்றிவிட்டு தேடி பார்த்தபோது மேலும் 3 பேரின் சடலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சடலங்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் நிகில், பாலாஜி, சச்சின் வர்மா என தெரியவந்தது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் குளத்தில் வேறு யாராவது உள்ளார்களா என போலீசார் தேடி வருகின்றனர்.