செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: மிலாஸ் ரோனிச் சாம்பியன்
9/28/2015 2:22:24 PM
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: கனடா வீரர் மிலாஸ் ரோனிச் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார். ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் நடந்து வந்தது. இறுதிப்போட்டியில் கனடா வீரர் மிலாஸ் ரோனிச், போர்ச்சுகல்லின் ஜோவோ சோசாவுடன் மோதினார். உலகின் 9ம் நிலை வீரரான மிலாஸ் ரோனிச் இந்த ஆட்டத்தில் 22 ஏஸ் சர்வீஸ்களை அதிவேகத்தில் வீசி அசத்தினார். முதல் செட்டை அதிரடி சர்வீஸ்களின் உதவியுடன் வென்ற ரோனிச்சுக்கு 2வது செட்டில் சவாலாக விளங்கினார் சோசா. இரண்டாவது செட்டில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோனிச்சின் சர்வீஸ் கேமை முறியடித்து செட்டை கைப்பற்றினார் சோசா.
மூன்றாவது செட்டில் சோசாவின் முதல் சர்வீஸ் கேமை பிரேக் செய்த ரோனிச், தனது சர்வீஸ்களில் 6 பிரேக் பாயிண்ட்களை சோசாவின் கைக்கு செல்லாமல் காப்பாற்றினார். 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் மிலாஸ் ரோனிச் 6-3, 3-6, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபனில் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோனிச், அதன் பின்னர் வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இது. இந்த வெற்றியின் மூலம் 24 வயது ரோனிச்சுக்கு இந்த ஆண்டின் இறுதி டென்னிஸ் போட்டியான ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாட இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. உலக டூர் பைனல்சில் விளையாட உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், ரோஜர் பெடரர், ஆண்டி முர்ரே, வாவ்ரிங்கா ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோங்கா அசத்தல்
மோசெலே ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரெட் சோங்கா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சோங்கா 7-6(5), 1-6, 6-2 என்ற செட்களில் சக நாட்டு வீரர் கில்லெஸ் சிமோனை வென்றார்.