குடும்பத்துடன் குதூகலிப்போம் வீக்கென்டில் ‘விறுவிறு...‘விடுமுறையால் ‘சுறுசுறு...’
9/26/2015 12:31:18 PM
‘அப்பா... இன்னைக்கு லீவு... ஈவினிங் ஷோ போவாமா? - என்று மகன், மகள் ஒருபுறம், ‘இன்னைக்கு மெஸ் லீவுங்க... லஞ்ச் ஓட்டலுக்குத்தான்’... இதுபோன்ற உரையாடல்களை ஞாயிறன்று ஒவ்வொரு வீடுதோறும் கேட்கலாம். விடுமுறை என்பது மாணவ, மாணவிகள், அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல... ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. இது புத்துணர்வுடன் ஒரு நாளை உற்சாகமாக கழிக்க உதவுகிறது.விடுமுறை என்பதை நாடுகளவில் பல்வேறு விதமாக ேவறுபடுகிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் விடுமுறை என்றால் வழக்கமான பணி அல்லது கல்வி கற்கையில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும் நாள் என்று கருதப்படுகிறது. ஐக்கியஅமெரிக்காவில் விடுமுறை என்பது ஏதேனும் ஒரு பண்டிகை அல்லது விழாவை கொண்டாட குறிக்கும் நாள் என்கின்றனர். வார விடுமுறை என்பது அனைத்து நாடுகளிலுமே கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
யூத நாட்டில் வெள்ளிக்கிழமை சூரிய மறைவில் இருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ‘ஷபாத்’ எனும் கட்டாய ஓய்வுநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கிறிஸ்தவ நாடுகளில் ஞாயிறு, இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஞாயிற்றுக்கிழமையையே வார விடுமுறை நாளாக கடைப்பிடித்து வருகின்றன.இந்தியாவில் தொழிலாளர் விடுமுறைகளுக்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை, தேசிய விடுமுறை, மாநில விடுமுறை, தற்செயல் விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்றவை அளிக்க வேண்டும் என்று இந்தியத் தொழிலாளர்கள் சட்டம் 1948ல் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பெண்களுக்கு பேறுகால விடுமுறையும் அளிக்க வேண்டும்(1961) என்றும் விதிமுறைகள் உள்ளன. ஒருவரது வார விடுமுறை என்பது அவரது வேலைநேரம் முடிந்த நிமிடத்தில் இருந்து தொடங்கி அடுத்த 24 மணிநேரத்தைக் குறிக்கும்.
இந்தியாவில் குடியரசுநாள், சுதந்திர தினவிழா, அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள்(அக்.2) என்று தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளூர்களில் நடைபெறும் பிரசித்தி பெற்ற சமய, பண்பாடு சார்ந்த விழாக்கள், இயற்கை இடர்பாடுகள் போன்றவற்றின் போது உள்ளூர் விடுமுறைகள் அளிக்கலாம். இதற்குப் பதிலாக மாற்றுத்தினத்தில் பணிபுரிய வேண்டும். மேலும் தமிழக அரசு சார்பிலும் விடுமுறை தினபட்டியல் அறிவிக்கப்பட்டு அவற்றை செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் பவுர்ணமி நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் பலரும் நாளொன்றிற்கு 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கட்டடத்தொழிலாளர்கள் உலகிலேயே முதன்முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் வெற்றியும் பெற்றனர். தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் இதுமைல்கல்லாக விளங்கியது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினம் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தியாவில் சென்னை மாகாணத்தில்தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் 1923ல் சென்னை கடற்கரையில் தொழிலாளர் தினவிழாவைக் கொண்டாடினார்.
விடுமுறை எல்லாம் மற்றவர்களுக்குத்தானா எங்களுக்கு இல்லையா என்று பொறுத்துப் பொறுத்துப்பார்த்த இல்லதரசிகள் பின்பு சட்டம் இயற்றாமலே விடுமுறை நாட்களை ‘தாங்களே’ வகுத்துக் கொள்ளத்துவங்கினர். ‘வெளியிலே எங்கேயாவது ஜாலியாக போய்ட்டு வரலாம்’ என்று தங்கள் விடுமுறையை அவர்களே பலவேளைகளில் நிர்மாணித்துக் கொண்டனர். ஏ,பி,சி,டி- ஐ முழுதாக எழுதத்தெரியாதவர்களையும் கடகடவென்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் வல்லமை கொடுத்தது இந்த விடுமுறைதான். ‘சார், ஐயாம் சஃபரிங் ப்ரம் பீவர். ஐ கேனாட் அட்டென்ட் தி கிளாஸ்’ என்று அவர்களுக்கு ஆங்கிலப்புலமை கொடுத்ததும் இந்த விடுமுறைதான். லீவுக்காக தாத்தாக்களையும், பாட்டிகளையும் முதலில் கொன்றவர்கள்(?) இந்த விடுமுறை ஆர்வலர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்படி பல்வேறு பரிணாமங்களாக நமக்குள் ஊடுருவிக்கிடக்கும் விடுமுறைகளை கொண்டாடி மகிழ்வோம்.
விரத முறைக்கூட உடல் உறுப்புகளுக்கான சிறிது நேர ‘விடுமுறை நேரம்’ என்றுக்கூட குறிப்பிடுவதுண்டு. கடின வேலைகளில் இருந்து எளிய வேலையாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்றார்கள். உடலும், மனதும் உற்சாகமாக இயங்க வைப்பதில் விடுமுறைக்கு முக்கிய பங்குண்டு.விட்டாச்சுப்பா லீவு... என்று நல்லா ‘உள்ளே’ பானத்தை ஏற்றிக்கொண்டு, வீட்டு உறுப்பினர்களை ‘உர்....ர்’ என்று ஆக்காமல், அவர்களை கோயில், பூங்கா, தியேட்டர், கடல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று உற்சாகமாக மாற்றுங்கள்... விடுமுறை ஒரு புதிய உலகத்தை உங்களுக்கு காட்டும்...’.