மக்கள் அதிருப்தி, கோஷ்டி பூசல் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் தொகுதி மாறி போட்டியிட திட்டம்?
9/26/2015 12:17:13 PM
திருச்சி: தொகுதி மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் காரணமாக தமிழக அமைச்சர்கள் இருவர் தொகுதி மாறி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கடந்த தேர்தலில் தெரிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க வேண்டும் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.தொகுதிகள் நிலை குறித்து உளவுத்துறையினரும் முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளின் நிலை ஒரு வேளை சரியில்லை என்றால், வேறு தொகுதி எது என்பது குறித்தும் உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் உள்ள அமைச்சர்களில் சிலர் மட்டும் தொகுதி மாற தயாராகி வருவதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்–்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வைத்திலிங்கம்-ஒரத்தநாடு தொகுதி, நாகை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால்- நாகை தொகுதி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பூனாட்சி-மண்ணச்சநல்லூர் தொகுதி, புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் சுப்பிரமணியன்-கந்தர்வகோட்டை என 4 அமைச்சர்களும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றனர் என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.அதே சமயம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் தனது தொகுதியான நன்னிலத்தை விட்டு மன்னார்குடியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது வீடு மட்டுமல்லாது தனக்கு போட்டியாக உள்ளதாக கூறப்படும் முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ், மன்னார்குடி நகராட்சி சேர்மன் சுதா போன்றவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டு அவர்கள் தனக்கு போட்டியாக மாறுவார்கள் என்கிற சந்தேகம் அமைச்சர் காமராஜூக்கு உள்ளது. அதனால் மன்னார்குடியில் போட்டியிட அவர் விரும்புவதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான விஜயபாஸ்கர் தற்போதைய தொகுதியான விராலிமலையில் இருந்து புதுக்கோட்டைக்கு அதாவது கிராமத்தில் இருந்து டவுனுக்கு மாற ஆயத்தமாகி வருவதாகவும் ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதுக்கோட்டை எம்எல்ஏவாக உள்ள கார்த்திக் தொண்டமானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அவர் அடுத்த அமைச்சராக வாய்ப்பு ஆகலாம் என புதுக்கோட்டைக்கு செல்ல அமைச்சர் விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல், தொகுதி மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியும் அமைச்சர்கள் தொகுதி மாறுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.