கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதி 7ம் வகுப்பு மாணவன் அசத்தல்
9/26/2015 12:14:19 PM
கோவை: கோவை பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராதிகாதேவி தம்பதியின் மகன் மாதேஷ் பரத்குமார்(12). நவஇந்தியாவில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர் கோவை தனியார் பயிற்சி நிறுவனத்தில் ‘பிரைன் ட்ரைன் புரோகிராம்’ என்ற பயிற்சியை பெற்று வருகிறார்.பயிற்சி மூலம், கண்களை மூடிக்கொண்டே நாளிதழ்களை வாசித்தல், எதிரேயுள்ள உள்ள பொருள்களை அடையாளம் காணுதல், சாலையில் எந்த வாகனம் செல்கிறது என கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் மாதேஷ் பரத்குமாரால் செய்ய முடிந்தது. மேலும், கண்களை கட்டியவாறு தேர்வை சரியாக தேர்வு எழுதும் நோக்கில், சில பிரத்யேகமான பயிற்சிகளை பெற்றார்.
இந்நிலையில், காலாண்டுத்தேர்வில் ஒரு பாடத்தை மட்டும் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அவருக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று நடந்த காலாண்டு இறுதி தேர்வின், ஆங்கிலப் பாடத்தேர்வினை மாதேஷ் பரத்குமார் கண்ணை கட்டியவாறு பிழையின்றி எழுதி அசத்தினார். சக மாணவர்களும், ஆசிரியர்களும் மாதேஷ் பரத்குமாரை பாராட்டினர்.இதுகுறித்து பரத்குமார் கூறுகையில், ‘பயிற்சி மூலம் கண்ணை கட்டிக்கொண்டு டி.வியில் உள்ள நிகழ்ச்சிகளை யூகிக்கவும், எதிரில் உள்ளவர்கள் என்ன நிற உடை அணிந்திருக்கிறார்கள் உள்ளிட்டவை அறிய முடியும். முழுமையாக மூளையை பயன்படுத்தும் வகையிலும், நினைவாற்றல் அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கின்றனர். மேலும், இந்த பயிற்சியில் எழுத்துகளுக்கு வாசனை உண்டு என்பதை அறிந்தேன். அதை பயன்படுத்தியே, நான் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதினேன்’ என்றார்.