சென்னை நகரில் மக்களை அச்சுறுத்தும் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மதிப்பதில்லை; போலீசாரும் கண்டுகொள்வது கிடையாது
9/16/2015 2:09:01 PM
சென்னை நகரில் நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, மாநகர பேருந்துகள் அதிகரிக்கப்படவில்லை. இயங்கிவரும் மாநகர பேருந்துகளும் சரியான நேரத்துக்கு வருவது கிடையாது. போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பீக் அவர்ஸ் இல்லாத நேரத்திலும் கூட பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தற்போது சென்னை நகரில் கோயம்பேடு, வடபழனி, மூலக்கடை, தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களும் மினி வேன்களும் ஆக்கிரமித்து விட்டன.‘மாநகர பேருந்துக்காக காத்திருப்பதை விட, நாம் கைகாட்டும் இடத்தில் ஏறிக்கொண்டு, நாம் சொல்லும் இடத்தில் நிறுத்தி இறக்கி விடுகின்றனர்’ என்று சென்னை நகர மக்களும் ஷேர் ஆட்டோக்களையும் மினி வேன்களையும் பெரிதும் நாடத் துவங்கினர்.
இந்நிலையில், சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் இந்த ஷேர் ஆட்டோ மற்றும் மினி வேன்கள் சாலை விதிகளை சற்றும் மதிக்காமல், கிடைக்கும் இடைவெளிகளுக்குள் புகுந்து, சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் கார் ஓட்டுபவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.இன்னும் சொல்லப் போனால், மக்களை அச்சுறுத்தும் வாகனமாக திகழ்ந்து வருகின்றன. இந்த வாகனங்களை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளாமல், ஆங்காங்கே கடை வாசலின் முன்பும், பஸ் நிறுத்தங்களின் முன்பும் ‘அன்பளிப்பு’களைப் பெற்றுக்கொண்டு நிறுத்திக்கொள்ள அனுமதிக்கின்றனர்.உதாரணமாக, தி.நகர், துரைசாமி சாலை திருப்பத்தில், தனியார் துணிக்கடை கார் பார்க்கிங் பகுதியில் சாலையோரமாக மினி வேனை நிறுத்துவதற்காக, வலதுபக்கத்தில் இருந்து திடீரென்று இடதுபக்கமாக டிரைவர் திருப்பினார்.
அப்போது மினி வேனுக்கு அருகே வந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது மினி வேன் மோதியது. இதைப் பார்த்ததும் வேன் டிரைவர் வண்டியை அங்கே நிறுத்தாமல், சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்தே விட்டார்.மினி வேன் இடித்ததில் காயமடைந்த 4 வாகன ஓட்டிகளும் அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டும் பயனில்லை.இதேபோல், சில தினங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஷேர் ஆட்டோ மோதியது. இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் ஷேர் ஆட்டோ டிரைவரை நையப் புடைத்தனர்.இதனால் பயந்துபோன டிரைவர், அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதாக ஆட்டோவில் அழைத்து சென்றார். ஆனால், அடிபட்டு மயக்க நிலையில் கிடந்தவரை மருத்துவமனையில் சேர்க்காமல், செல்லும் வழியில் உள்ள ஒரு புதரில் போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். பின்னர், அடிபட்டவர் மயக்கம் தெளிந்து ஒருவழியாக மூலக்கடையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வடபழனியில் உள்ள திரையரங்கம் அருகே ஒருவழிப் பாதையை அடைத்தபடி ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை அருகிலுள்ள வடபழனி காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.இதேபோல், கே.கே.நகர் இசிஐ மருத்துவமனை அருகிலும் எதிர்புறத்திலும் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்தபடி நிறுத்தப்படுகின்றன. அங்கு போலீசார் இருந்தாலும் கண்டுகொள்வதில்லை.இதுகுறித்து வாகன ஓட்டிகள் புகார் கூறினாலும், ‘அவன் வயித்துப் பிழைப்புக்காக சாலையில் நிறுத்தி பயணிகளை ஏத்துறான். அவன் பொழைப்பை கெடுக்காதீங்க’ என்று சர்டிபிகேட் கொடுக்கின்றனர்.வடபழனியில் இருந்து போரூர் வரை செல்லும் குறுகலான சாலையில், நின்று கொண்டிருக்கும் பேருந்துகள் மற்றும் கார்களுக்கு இடையே ஷேர் ஆட்டோக்கள் புகுந்து, மற்றவர்களை இடித்தபடி வேகமாக செல்கின்றன.இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி சாலையோரமாக சென்றாலும், அவர்களும் சீக்கிரம் அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு செல்வதற்காக சாலையோரத்தையும் ஆக்கிரமிக்கின்றனர். இதனால் பலர் அடிபட்டு படுகாயங்களுடன் தங்கள் வீடுகளுக்கு செல்லும் அவலநிலை உள்ளது.
போரூர் ரவுண்டானாவில் கிண்டி செல்லும் சாலையை ஆக்கிரமித்தபடி ஷேர் ஆட்டோக்களும் மினி வேன்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பேருந்துகளில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதில் கொடுமை என்னவென்றால், ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தபட்சம் 4 பேர் மட்டும்தான் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஷேர் ஆட்டோ மற்றும் மினி வேன் டிரைவர்களும் கலெக்ஷனை அதிகப்படுத்தி காட்ட, நெரிசல் நேரங்களில் கூடுதலாக 12 பேர் வரை ஏற்றி செல்கின்றனர்.இதனால் ஷேர் ஆட்டோ மற்றும் மினி வேனில் பயணிப்பவர்களும், தங்கள் உயிரை கையில் பிடித்தபடி நெருக்கி உட்கார்ந்தபடிதான் செல்கின்றனர்.
இதுகுறித்து ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டால், ‘நாங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ. 1,500 கலெக்ஷன் கட்ட வேண்டும். இல்லையென்றால், எங்களுக்கு அடுத்த நாள் வண்டி தர உரிமையாளர் மறுத்து விடுகிறார். போலீசார் அன்பளிப்பு போக, எங்கள் சம்பளத்தையும் இதிலிருந்துதான் எடுக்க வேண்டும்’ என்று பொருமுகின்றனர்.மக்களை அச்சுறுத்தும் வாகனமாக ஷேர் ஆட்டோ மற்றும் மினி வேன்கள் மாறி வருகின்றன.இவை பெரிய விபரீதத்தில் முடிவதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?