200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
9/5/2025 12:55:10 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் தமிழ்தாய் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் நேற்றிரவு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தமிழ்தாய் கோயில் நிறுவப்பட வேண்டும். பாஜ தலைமையிலான மத்திய அரசு தமிழை மதிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கும் முயற்சியில் பாஜ முழு முயற்சி செய்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவிக்கும் திட்டங்களை தமிழக பாஜ வரவேற்கிறது. திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தி விடாமல், அதை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும். சுங்கச்சாவடி தொடர்பாக தமாகா போராட்டம் நடத்துகிறது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் 125 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 200 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.