தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
9/5/2025 12:41:37 PM
சென்னை: தமிழக விவசாயிகளின் நலன்கருதி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருமாறு அந்த அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்க வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தொடர்ந்து தர மறுத்துவறுவது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். காரிவி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்ட நிலையில் அந்த இறுதித் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தரவேண்டியது கர்நாடக அரசின் கடமையாகும். இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாத காரணத்தால் 2015 ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கான குறுவைச் சாகுபடிக்கு தண்ணீரைத் திறந்துவிட முடியவில்லை.
இருந்தபோதிலும், கடந்த மாதம் 9ம் தேதி மேட்டூர் அணையிலிருநது 60.411 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதை வைத்து டெல்டா விவசாயிகள் முழு அளவில் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளனர். சம்பா பயிருக்கு 2016 ஜனவரி வரை தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.செப்டம்பர் 4ம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு 50.552 அடியாக உள்ளது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள 4 முக்கிய அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. எனவே, ஜூலை மாதம் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்க வேண்டும்.
காரிவி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்ஹ பில்லிகுண்டுல அணையிலிருந்து 2015 ஆகஸ்ட் 31க்குள் 94 டிஎம்சி அடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், 66.443 டிஎம்சி அடி தண்ணீர்தான் தமிழகத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் 27.557 டிஎம்சி அடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.காரிவி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மாறாக தமிழக விவசாயிகளைக் கவனத்தில் கொள்ளாமல் கர்நாடக அரசே தனது பாசனத்திற்கு அனைத்து தண்ணீரையும் பயன்படுத்தி வருகிறது.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமரான நீங்கள் தலையிட்டு தமிழகத்திற்கு தரவேண்டிய மீதமுள்ள 27.557 டிஎம்சி தண்ணீரைத் தருமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தமிழகத்தின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.