அறம் செய்ய மட்டுமல்ல... ஆசிரியரையும் விரும்பு...!
9/5/2025 12:25:15 PM
ஆசிரியர் பணியை மிகவும் நேசித்த சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இந்தியா முழுவதும் (செப்.5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாளை இத்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.செப்.5 1888ல் பிறந்தார். திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில், சர்வபள்ளி வீராச்சாமி - சீதம்மா தம்பதிக்கு செப்.5, 1888ல் மகனாக பிறந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தன் இளமைக்காலத்தை திருத்தணி, திருப்பதியில் கழித்தார். தனது 16வது வயதில் சிவகாமு என்ற பெண்ணை மணம் முடித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில முதுகலைப்பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார்.
1938ல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, உயர்நிலைப்பள்ளிகளில் இந்திமொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்திமொழி திணிப்பிற்கு எதிராக அன்றே குரல் கொடுக்க துவங்கினார்.1965ல் மத்திய அரசின் ஆட்சிமொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும்படி குடியரசுத்தலைவரான ராதாகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார். பிரதமரின் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து நிராகரித்தார்.இதன்மூலம் மொழி திணிப்பிற்கு எதிரான இவரது உணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.
சிக்கல் நிறைந்த தத்துவக்கருத்துக்களை எளிமையாக விளக்கிக் கூறுவதில் வல்லவர். இதனால் சிறந்த தத்துவஞானியுமாக இவர் கருதப்படுகிறார். 1954ம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ‘ஆசிரியர்களின் தந்தை’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.ஒருமுறை மைசூர் பல்கலை.யில் இருந்து கல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிலை. இது மைசூர் மாணவர்களுக்கு வேதனையை அளித்தது. குதிரை வண்டியில் புறப்படத்தயாரான போது அன்பின் மிகுதியால் வண்டியில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு தாங்களே இழுத்துச்சென்றனர். அங்கிருந்தவர்கள் மாணவர்களின் குரு பக்தியையும், மாணவர்கள் மேல் ராதாகிருஷ்ணன் கொண்டிருந்த பாசத்தையும் எண்ணி மகிழ்ந்தனர். இதை மறக்க முடியாத நிகழ்ச்சியாக பிற்காலத்தில் நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
நாட்டின் உயர்ந்த பணிக்குச்சென்றாலும் ஆசிரியராக அவரின் பணி மாணவ சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பணியை வேலையாக கருதாமல் சேவையாக முழு ஈடுபாட்டுடன் செய்ததால் மாணவர்களுக்குள்ளும் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது.காந்திஜி ஒருமுறை இவரிடம், ‘பால் அசைவம்தான். ரத்தத்தில் இருந்துதானே உற்பத்தியாகிறது. அது இறைச்சிக்குச் சமம்’ என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், அப்படி பார்த்தால் நாம் யாருமே சைவம் கிடையாது. உங்கள் கூற்றுப்படி தாய்ப்பாலும் அசைவம்தானே என்று பதிலளித்தார்.இன்னொருமுறை காந்தி, ‘நோய்க்கு மருந்து சாப்பிடவேண்டியதில்லை. காடுகளில் வாழ்பவர்கள் மருத்துவம் இல்லாமல் வாழ்கிறார்களே’ என்றார்.
அதற்கு ராதாகிருஷ்ணன், ‘அங்கும் பல ஆயிரம் பேர் நோயால் மடிந்து கொண்டுதான் இருக்கின்றனர்’ என்றார். அதற்கு காந்தி, ‘உங்களுக்கு எப்படி அது தெரியும்’ என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், ‘உங்களுக்கு அவர்கள் வியாதியால் இறக்கவில்லை என்று எப்படித் தெரிகிறதோ, அப்படித்தான் எனக்குத்தெரியும்’ என்றார். இது போன்ற தர்க்கவாதங்கள் காந்திஜியை வியப்பில் ஆழ்த்தியது.1950ல் இந்திய அரசு ராதாகிருஷ்ணனை ரஷ்யாவின் அரசாங்கத் தூதுவராக நியமித்தது. பணி முடித்து உபச்சார விழா நடைபெற்றது. ஓர்அரசாங்க தூதருக்கு ரஷ்ய அமைச்சகம் விருந்தளிப்பது அதுவே முதல்முறை.உயர்ந்த பதவிகள் பல வகித்தாலும் ஆசிரியர் பணியை அவர் மிகவும் சிலாகித்ததால், அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதுகளையும் வழங்கி கவுரவித்து வருகிறது. எதிர்கால சமுதாயத்தின் தூண்களான மாணவர்களை சிறப்பாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அலாதியானது. இந்நாளில் அதற்கான சூளுரைகளை மேற்கொள்வோம்...!