மகாராஷ்டிராவில் பயங்கரம் : குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்
9/2/2025 3:12:59 PM
புனே: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. முதல் சம்பவம் புனேயில் உள்ள கோந்த்வா அருகில் உள்ள மாரல் நகர் என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பழைய இரும்பு கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருள் ஒன்று வெடித்தது. இதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளரான அஸ்லாம் சவுத்ரி என்ற 20 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
அதே போல் இரண்டாவது சம்பவத்தில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் படுகாயமடைந்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பண்டுரான் ஜாதவ் என்பவருக்கும் தேவிதாஸ் காலே என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதில் தேவிதாஸ் காலேவை கொல்வதற்காக அவரது பைக்கில் ஜெலட்டின் குச்சிகளை கொண்டு தயார் செய்யப்பட்ட வெடிகுண்டை ஜாதவ் பொருத்தியுள்ளார், காலே பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அது வெடித்துள்ளது என்பது விசாரணையில் தெரிந்தது. இதில் காயமடைந்த தேவிதாஸ் காலேவை மருத்துவமனைக்கு அனுப்பினர். குண்டு வைத்த ஜாதவை போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த சம்பவங்கள் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தின.