மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு ரூ. 76 கோடி பாக்கி தரவில்லை
9/2/2025 3:11:45 PM
சென்னை: ரூ. 76 கோடி பாக்கி தராததை கண்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவித்தனர்.தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நல சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் சென்னையில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் எங்களது நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டன. இந்த இயந்திரங்கள் கடந்த 3 மாதமாக எந்தவித பணியும் இல்லாமல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரங்கள் பழுதடைந்து துருபிடித்து காணப்படுகிறது. இயந்திரங்களை எங்களிடம் ஒப்படைக்க மறுக்கிறார்கள். அதேபோல எங்களுக்கு ரூ. 76 கோடி பணம் தராமல் இருக்கிறார்கள். இதை கண்டித்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகம் முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்படும்.கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக வரும் 7ம் தேதி மெட்ரோ ரயில் நிலைய பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து இயந்திரங்களையும் நிறுத்தும்போராட்டம் நடக்கும். அதற்கும் தீர்வு காணாவிட்டால் குடும்பத்தினருடன் இணைந்து தலைமை அலுவலகம் முன் 11ம் தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கும். அதற்கும் தீர்வு இல்லாவிட்டால் 18ம் தேதி தலைமை அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கத்திபாரா ஜனார்த்தனன் கூறினார்.