32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு வாய்ப்பு இலங்கையின் எதிர்கட்சி தலைவராகிறார் சம்பந்தன் : அதிபர் சிறிசேன ஒப்புதல்
9/2/2025 2:59:28 PM
கொழும்பு: இலங்கையின் எதிர்கட்சி தலைவராக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் கடந்த 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நேற்று முதன்முறையாக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் கொழும்புவில் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மேலும் ரணில், சிறிசேன கட்சிகளின் கூட்டணியால் அமைய உள்ள தேசிய அரசில் புதிய அமைச்சர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதையொட்டி தேசிய அரசின் சபாநாயகராக சிறி சேன கட்சியைச் சேர்ந்த கரு ஜெய சூர்ய நேற்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்த சூழலில் அரசில் பங்கெடுக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான எம்பிக்களை அதாவது 16 எம்பிக்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது. எனவே அதற்கே எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்பியுமான இரா. சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதற்கான அறிவிப்பை நாளை சபாநாயகர் கரு ஜெயசூரியா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலையும் அதிபர் சிறிசேன வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 83ம் ஆண்டு ெஜயவர்தனே அதிபராக இருந்த போது இலங்கை தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.