ரூ. 1 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி கிடைக்கும் டுபாக்கூர் அறக்கட்டளை நிர்வாகியிடம் போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை
9/2/2025 2:13:04 PM
நாகை: ஒரு லட்சம் கொடுத்தால் 3 மாதத்தில் ஒரு கோடி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவர் ஒரு அறக்கட்டளை துவங்கினார். இதன் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்தால் 3 மாதத்தில் ரூ.1 கோடி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஏஜென்ட்களை நியமித்து பணம் வசூலித்து வந்தார். ஆனால் சொன்னபடி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த கருணாகரன், கோபால், முத்துக்குமார், ஸ்டான்லி ஆகியோர் ரவிச்சந்திரனின் ஏஜென்டாக செயல்பட்டு வந்தனர். வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களிடம் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்து ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வேதாரண்யத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(40) என்பவர் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர்கள் கூறியபடி 3 மாதம் கழித்து ரூ.1 கோடி தரவில்லை. பணம் கேட்டு தமிழ்ச்செல்வன் நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கு அவர்கள், ரவிச்சந்திரன் பெயரில் ரூ.2500 கோடிக்கான காசோலை ஒன்றின் ஜெராக்சை காட்டி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் பணம் வந்துள்ளதாகவும், கன்டெய்னரில் பணம் இருப்பதாகவும், காசோலையை வங்கியில் போட்டதும் பணம் கைக்கு வந்து விடும்’ என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னதை தமிழ்ச்செல்வன் நம்பவில்லை.இதுபற்றி தமிழ்ச்செல்வன், கடந்த மாதம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ஈரோட்டை சேர்ந்த ஒருவர் பணம் கொடுத்து ஏமாந்ததாக ரவிச்சந்திரன் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து, அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து, ஈரோடு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நாகை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பாண்டி, இன்ஸ்பெக்டர் வீரோத்தம நாயகி ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ரவிச்சந்திரனை ஜாமீனில் எடுத்தனர். பின் அவரை நாகைக்கு அழைத்து சென்று முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரவிச்சந்திரனை நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சரஸ்வதி, ரவிச்சந்திரனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.