பண்ருட்டி பஸ் நிலையத்தில் போதையில் ஆட்டம் போட்ட பெண் வாட்ஸ்அப் காட்சியால் பரபரப்பு
9/2/2025 2:05:38 PM
பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் பற்றிய காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பண்ருட்டி பஸ் நிலையம் மக்கள் நெருக்கடியில் காணப்படுகிறது. அந்த இடத்துக்கு ஒரு பெண் திடீரென வருகிறார். சுமார் 40 வயது இருக்கும் அந்த பெண் குடிபோதையில் தள்ளாடியபடி ரகளை செய்கிறார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். போதையில் தள்ளாடிய அந்தப்பெண், திடீரென அங்கு நிலக்கடலை விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் சென்று நிலக்கடலை கொடு என்று மிரட்டுகிறார். அத்துடன் அப்பகுதியில் இருந்த தள்ளுவண்டி டீபன் கடை, சிக்கன் கடை உள்ளிட்ட கடைகளுக்கு சென்று அந்த கடைக்காரர்களிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டு கலாட்டா செய்கிறார்.தகவலறிந்த பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று, அந்தப்பெண்ணை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்களிடமும் தகராறு செய்கிறார். பின்னர் உறவினர் ஒருவர் மூலம் அந்தப்பெண்ணை சகஜநிலைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு வாட்ஸ் அப்பில் காட்சி பதிவாகி உள்ளது.இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் குடிபோதையில் தள்ளாட்டம் போட்ட பெண் விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இறுதியாக, ஒரு பெண் குடித்துவிட்டு செய்த ரகளையை பார்த்தாவது மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் காட்சி முடிவடைகிறது.