நாடு முழுவதும் ஸ்டிரைக் : சரக்கு போக்குவரத்து வங்கி சேவை முடக்கம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை
9/2/2025 1:46:31 PM
சென்னை: நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அலுவலக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. சரக்கு போக்குவரத்து முடங்கியது. மாநில அரசுப் பணிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூதிய சட்டம், புதிய மின்சார சட்டம், போக்குவரத்து சாலை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்து தொழிலகங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் சுமார் 20 கோடிக்கும் மேற்பட்டோரும், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு வங்கி, தபால், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் தவிர தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்பட அனைத்து தொழிற்சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும், தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு, பஸ்களை இயக்கி வருகிறது. கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையம், காலை சற்று மந்தமாக காணப்பட்டாலும், போகப் போக பஸ்கள் வழக்கம் போல் ஓடத் துவங்கின. தாம்பரம் டெப்போவில் 211 பஸ்களில் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே சென்று விட்டதாக நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தாம்பரத்தில் உள்ள விழுப்புரம் கோட்ட டெப்போவில் 54 பஸ்களும், குரோம்பேட்டை டெப்போவில் 153 பஸ்களும் வெளியே சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா மேற்கில் 207ல் 150க்கு மேற்பட்ட பஸ்கள் வெளியே சென்றுள்ளன.
பிஎஸ்என்எல் அலுவலகங்கள், இணைப்பகங்களில் முழுமையாக பணிகள் முடங்கியுள்ளது. தொழிற்சங்கம் சார்பில் பல்லவன் இல்லம், சென்ட்ரல் ரயில்வே நிலையம் உள்பட 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொமுச சார்பில் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போன்று ஆட்டோ, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் ஒரு சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல் ஓடத்துவங்கின. லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சரக்குகள் தேக்கமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தொழிற்சங்கத்தினர் பேட்டி:சிஐடியு (மாநகர போக்குவரத்து கழகம்) தலைவர் சேகர்: இன்று காலை ஆலந்தூர், மாதவரம், பேசின்பிரிட்ஜ், மத்திய பணிமனை தவிர மற்ற பணிமனைகளில் காலை 8 மணி வரை 30 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. சுமார் 50 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பஸ்கள் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன. பகலில் புறப்பட வேண்டிய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் முழு அளவில் பஸ்கள் இயங்கவில்லை. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தினசரி ரூ.3 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. இதில் 50 சதவீதம் இழப்பீடு ஏற்படும். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றோர் சங்கம், வேன், ஆட்டோ, லாரி, பஸ், மெக்கானிக், மணல் லாரி சங்கம், கால் டாக்சி சங்கம் உள்பட 16 அமைப்புகள் ஒன்று கூடி இன்று மாலை பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார். மத்திய அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் துரைபாண்டியன்: தபால்துறை, கல்பாக்கம் அணுமின்நிலைய ஊழியர்கள், ஏஜிஎஸ் அலுவலகம், வருமான வரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்து கொண்டு உள்ளனர். ராஜ்பவன், சாஸ்திரிபவன் உள்ளிட்டவைகளில் ஒரு சில அதிகாரிகள் வந்திருந்தாலும், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றார்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அப்துல் அகமது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை திருத்தணி போலீசார் கைது செய்து மேல்திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். சிஐடியு சார்பில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.