மாணவர் சஸ்பெண்ட் விவகாரம் : சென்னை பல்கலை முற்றுகை மாணவர் அமைப்பினர் கைது
9/1/2025 3:07:53 PM
சென்னை: மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை பல்கலையை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்களை ேபாலீசார் கைது செய்தனர். சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் பதவியிறக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பு சார்பில் இன்று பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், இந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை பல்கலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் தமீம் அன்சாரி கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை தூண்டி விட்டதாக கூறி ராமு மணிவண்ணனை துறை தலைவர் பொறுப்பில் இருந்து பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். பேராசிரியரை மீண்டும் துறை தலைவர் பொறுப்பில் அமர்த்துவதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களையும் மீண்டும் பல்கலையில் சேர்க்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். தேவைப்பட்டால், மாணவர்களை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.