குறை தீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வாலிபருக்கு பெண் இன்ஸ்பெக்டர் ‘பளார்’
9/1/2025 3:02:00 PM
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நேற்று நடந்தது. நாட்றம்பள்ளியை சேர்ந்த சேகர்(36) கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். இவர் கடந்த 2001ம் ஆண்டு திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ளார். குடும்ப தகராறில் மாடியில் இருந்து தள்ளிவிட்டதில், சேகரின் ஒரு கை முறி்ந்து விட்டதால் பிச்சை எடுத்து வருகிறாராம். இதனால் மனைவி, கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம்.தனக்கு தொல்லை கொடுத்து வரும் தனது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை சேகர் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். நேற்று காலை நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க சேகர் வந்தார்.
அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த வேலூர் அனைத்து மகளிர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சேகரை மடக்கி, எத்தனை முறைதான் மனுகொடுக்க இங்கு வருவாய் என்று கேட்டபடி, அவரை வெளியே தள்ளினார். ஆத்திரமடைந்த சேகர், ‘நான் கொடுத்த 6 மனுக்களில் ஒரு மனுவுக்காவது தீர்வு கண்டால் நான் ஏன் இங்கு வரபோகிறேன். எனக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். நான் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்கவேண்டும்’ என்றார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் செல்வி, வெளியே போகும்படி தள்ளியவாறு திடீரென சேகரின் கன்னத்தில், ‘பளார், பளார்’ என்று அறைந்துவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.