பஸ், ஆட்டோ நாளை ஓடாது
9/1/2025 3:01:32 PM
சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தற்போது உள்ள பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத்தை அனைத்து தொழிலகங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (2ம் தேதி) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று கடந்த மே மாதம் 26ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உள்பட 11 தொழிற்சங்கங்க நிர்வாகிகள் இணைந்து ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
நாளை நடபெற இருக்கிற பொது வேலை நிறுத்த போராட்டத்தில், மத்தி, மாநில அரசு ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம், வங்கி, இன்சூரன்ஸ், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, கார் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம், உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. தமிழகத்திலிருந்து சுமார் 30 லட்சத்துக்கு மேற்பட்டோரும், நாடு முழுவதிலிருந்து 20 கோடிக்கு மேற்பட்டோரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இதில் ஆளும்கட்சி சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பங்கு கொள்ள இருப்பதாலும், தனியார் பேருந்து ஊழியர்களும் கலந்து கொள்வதாலும், பெரும்பாலான பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று ஆட்டோ, டிராவல்ஸ் கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.