பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட கோரி சசிபெருமாள் சமாதி அருகே குடும்பத்தினர் உண்ணாவிரதம்
8/24/2015 3:24:00 PM
இளம்பிள்ளை: இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிடக்கோரி, சசிபெருமாளின் சமாதி அருகே மனைவி, மகன்கள், மகள் உள்பட குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள், மதுவிலக்கு போராட்டத்தின் போது உயிரிழந்தார். அவரது கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சசிபெருமாளின் மரணத்திற்கு பின், தமிழகம் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன.ஆனால் தமிழக அரசு மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவரது மரணத்திற்கு அரசு சார்பில் இரங்கல் கூட தெரிவிக்கப்படவில்லை. இது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனிடையே சுதந்திர தின விழாவின் போது, மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான எவ்வித அறிவிப்பும் முதல்வர் உரையில் இடம் பெறவில்லை.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் அறிவித்திருந்தார்.இதன்படி சசிபெருமாளின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காட்டில், சசிபெருமாளின் சமாதி அருகே அவரது குடும்பத்தினர் இன்று காலை 6 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கினர். சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி, அண்ணன் வெங்கடாச்சலம், தம்பி செல்வம் மற்றும் குடும்பத்தினர் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவேக் கூறுகையில், இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். குறைந்தபட்சம் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி கொள்வதாக இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அப்படி இன்று மாலைக்குள் தமிழக அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகாவிட்டால், தேசிய மக்கள் கூட்டமைப்பின் மூலம், மதுவிலக்கை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.