குரூப் 2 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை
8/24/2015 3:23:03 PM
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 பதவிகள் அடங்கிய 19 வகையான பணிகளுக்கு கடந்தாண்டு நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற 5635 பேர் சான்றிதழ் சாரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மார்ச் 26ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை நடந்தது. இதில், 2266 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு ஜூலை 15ம் தேதி முதல் ஆக. 8ம் தேதி வரை நடந்தது. இதை தொடர்ந்து ஆக. 13ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதில், 2222 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் செப் 1ம் தேதி நடைபெறுகிறது. தினந்தோறும் 300 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த குரூப் 2 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- குரூப் 2 தேர்வுக்கு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
கலந்தாய்வில் தேர்ச்சி பெற்றோர் விவரம் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் பெற்ற ரேங்க் உள்ளிட்ட விவரங்கள் முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு முடிந்தவுடன் வெளியிடப்படும். இதனை மற்ற தேர்வாளர்கள் பார்த்து எந்தந்த துறையில் காலி பணியிடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கலாம். விஏஓ பணியில் காலியாக உள்ள 800 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். இந்த பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவர்கள் காலி பணியிடங்கள் விவரங்கள் தெரிவித்த பின்னர் அந்த பணியிடங்கள் நிரப்படும். குரூப் 2 ஏவில் 700 காலி பணியிடங்கள். வட்டார சுகாதார புள்ளியிலாளர் 180 பணியிடங்கள், இந்து அறநிலை துறையில் செயல் அதிகாரி 20 பணியிடங்கள், சிறை துறையில் ஜெயிலர் உதவி ஜெயிலர் 70 காலி பணியிடங்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இன்ஜினியரிங் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் ஒரு வாரத்திலும், குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். குரூப் 2 தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 9 பேர் உதவி வணிக வரி அதிகாரி பணியிடத்தையும், ஒருவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் உதவி பிரிவு அதிகாரி் பணியிடத்தையும் தேர்ந்தெடுத்தார். முதலிடத்தை விருத்தாசலத்தை சேர்ந்த ஜெயபிரித்தா பிடித்தார். இவர் எம்இ பட்டப்படிப்பு படித்தவர். முதன் முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பயிற்சி மையத்தில் படித்ததால் முதல் இடத்தை பிடிங்க முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.