‘குறைபாடுகளை நிவர்த்தி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது : அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
8/24/2015 3:22:29 PM
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதுதொடர்பான அறிக்கையை அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றும் அரசாணையையும் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியை மனோன்மணி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010-ம் ஆண்டு சர்வதேச தரத்துடன் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த அண்ணா நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இயக்குனரகம் வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்ய ஐகோர்ட்டுக்கும் இடைக்கால தடை விதித்து, அந்த தடை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.
இதையடுத்து அண்ணா நூலகத்தின் நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் எம்.சுந்தரம், பி.டி.ஆஷா ஆகியோரை வக்கீல் கமிஷனர்களாக நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கின்றோம்.
மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்கிறோம். மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எக்காரணம் கொண்டு அரசு இடம் மாற்றம் செய்யக்கூடாது.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை வக்கீல் கமிஷனர்கள் சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதாவது, அண்ணாதுரை பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி, அந்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள். இந்த வழக்கு விசாரணையின்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலையை நீதிபதிகள் நீங்கள் நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று மனுதாரர் வக்கீல் வில்சன் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், ‘‘வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாங்கள் நூலகத்தை பார்க்க வருவோம்’’ என்று கூறினார்கள்.