சட்டசபை இரங்கல் கூட்டத்தில் முதல்வரை புகழ்பாடும் சபாநாயகர் மு.க.ஸ்டாலின் பேட்டி
8/24/2015 3:21:15 PM
சென்னை : சட்டசபைக்கு வெளியே இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கும், தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தோம்.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை கூடுகிறது. இக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, சபைக்கு வெளியே நாதஸ்வரம் ழுழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குக்கூட, இதுபோன்ற இசைவாத்தியங்கள் முழங்க தமிழக முதல்வரை வரவேற்பதா?
அப்துல்கலாமுக்கு இரங்கல் தெரிவிக்க சபையின் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் பல்வேறு கட்சி உறுப்பினர்களை அழைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கவில்லை.அதற்குப் பதிலாக, முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கே சபையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்வரானதற்கு சபாநாயகர் அரைமணி நேரம் புகழாரம் சூட்டினார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போதே, ஏதோ நிரந்தரமாக விடுதலையானது போல் அவரை வாழ்த்துகின்றனர்.
ஆர்கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா எவ்வாறு வெற்றி பெற்றார் என்ற பிரச்னைக்கு நாங்கள் செல்லவில்லை. இருப்பினும், மகத்தான மனிதரான அப்துல்கலாம் மறைவுக்கு சட்டசபையில் முறையாக இரங்கல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவும் முறையாக நடைபெறவில்லை..தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி சபாநாயகரிடம் தனிநபர் தீர்மானம் கொடுத்துள்ளோம். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில், இதுதொடர்பாக விவாதம் எழுப்ப கோரிக்கை வைத்துள்ளோம்.இங்கு நடந்த சபை நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, சட்டசபை தொடர் முழுவதும் முதல்வரின் புகழ்பாடும் மன்றமாகத்தான் நடைபெறும் என்று தோன்றுகிறது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.