கேரளாவில் விற்பனை மந்தம் எதிரொலி: தமிழகத்தில் பூக்கள் விலை சரிவு : மல்லிகை கிலோ ரூ. 100க்கு விற்பனை
8/24/2015 2:37:32 PM
ஆரல்வாய்மொழி: கேரளாவில் பூக்கள் விற்பனை மந்தமடைந்துள்ளதால் தோவாளை சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளது.தோவாளை பூ மார்க்கெட்டிற்கு தோவாளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள், அண்டை மாவட்டங்கள் மற்றும் பெங்களூர், ஓசூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.ஓணம் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம் போடப்படும் என்பதால் கேரளாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் தோவாளை சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை ஓரளவு உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்தது. நேற்றும் தொடர்ச்சியாக பூக்கள் விலை குறைந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.250க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.100க்கு விற்பனையானது. இது போல் பிச்சி ரூ.300, முல்லை ரூ.400ல் இருந்து ரூ.300, தோவாளை அரளி ரூ.120ல் இருந்து ரூ.80, சேலம் அரளி ரூ.50, சம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.100, கனகாம்பரம் ரூ.200, ஆரஞ்சு கிரேந்தி ரூ.40ல் இருந்து ரூ.25, மஞ்சள் கிரேந்தி ரூ.50ல் இருந்து ரூ.25, ஸ்டெம்ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.120, பாக்கெட் ரோஸ் ரூ.40, ஒரு தாமரை பூ ரூ.2ல் இருந்து ரூ.1 ஆககுறைந்தது.‘’ தோவாளை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் கேரளாவில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதால் பூக்கள் வாங்குவதற்காக தோவாளைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.